ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 3000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்
ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் 1.85டி.எம்.சி கொள்ளளவு கொண்ட பிச்சாட்டூர் அணையில் தற்போது 1.59டி.எம்.சி நிறைந்து 85% நீரைக் கொண்டுள்ளது. 31அடி உயரம் கொண்ட பிச்சாட்டூர் ஆணை 29அடி நீர் இருப்பு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து வரும் உபரிநீர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழையால் அணைக்கு 2000கன அடிக்கு மேலாக நீர்வரத்து அதிகரித்து வருவதால் பிச்சாட்டூர் அணையிலிருந்து ஆரணியாற்றில் வினாடிக்கு 3000கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீரானது தமிழக எல்லைக்கு பிற்பகலில் வந்தடைந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, புதுவாயல், பொன்னேரி, பெரும்பேடு, தத்தைமஞ்சி வழியாக ஆரணியாற்றில் பாய்ந்து பழவேற்காடு கடலில் கலக்கவுள்ளது. ஏற்கெனவே ஆரணியாற்றில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் ஆந்திராவில் இருந்து வரும் உபரிநீரால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் ஆரணியாற்றின் கரையோரம் வசிக்கும் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் பொன்னையா கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஊத்துக்கோட்டையில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஆரணி அருகே இரண்டு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.