விவசாயிகளின் நியாயமான ஆர்ப்பாட்டங்களில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பங்கேற்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநிலப் பொதுச் செயலாளர் வி. கோவிந்தராஜுலு வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், இந்திய விவசாயிகள், மத்திய அரசின் புதிய வேளாண் விளைபொருள் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு பல்வேறு போராட்டங்களை தலைநகர் தில்லியில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளோடு, வணிகர்களுக்கு தொண்மை வாய்ந்த பிணைப்பும் வரலாறும் உண்டு. விவசாயிகளைப் பாதுகாக்க வணிகர்கள் என்றும் கடமைப்பட்டுள்ளனர்.
அவர்களின் கோரிக்கைகள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தன்னுடைய தார்மீக் ஆதரவை என்றும் அளிப்பதற்கு முன்னுரிமை அளிப்பதோடு, விவசாயிகள் நடத்துகின்றன அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் தமிழகம் தழுவிய அளவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் வெற்றிபெற துணை நிற்போம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.