சுங்கச்சாவடி அகற்றக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் பாளையம் சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமை நிலையச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்துப் பேசினார்.
மாவட்டச் செயலாளர்கள் ஜெயந்தி(கி), ஜானகிராமன் (மே) ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு அமைப்புச் செயலாளர் கி.கோவேந்தன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். இப்போராட்டத்தில் சுங்கச் சாவடியைக் கடக்கும் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது கைவிட வேண்டும். சுங்கச் சாவடி பாளையம் பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்ட துணைச் செயலாளர் மின்னல் சக்தி, அரூர் தொகுதி செயலாளர் சர்மா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை தொப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.