திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளர்களுக்கு கடந்த 2 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகளில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த தொழிலாளர்களாக சுமார் 800–க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர். இந்தப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதைத்தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகள் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள கூறியதாவது:
மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கும் எங்களுக்கு, எங்கள் நிறுவனம் உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவதில்லை. எங்களது ஊதியத்தில் ஒன்று அல்லது 2 மாத ஊதியத்தை நிலுவையில் பிடித்து பின்னர் காலதாமதமாகவே கொடுத்து வருவதால் அவதிக்குள்ளாகி வருகிறோம். ஏற்கெனவே ஒரு மாத ஊதியம் நிலுவையில் உள்ள நிலையில் நவம்பர் மாத ஊதியமும் வழங்கப்படாததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆகவே, மாநகராட்சி உயர் அதிகாரிகள் நிலுவை ஊதியத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.