செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் கொள்ளை விவகாரத்தில் ஊழியர்கள் இருவர் போலீஸில் சனிக்கிழமை சரணடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு பரனூா் சுங்கச்சாவடியில் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி செல்லும் எஸ்இடிசி அரசுப் பேருந்து சுங்கச்சாவடியை கடக்கும் போது ஊழிர்யல் சுங்கக்கட்டணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநா், நடத்துநா் மற்றும் சுங்கச்சாவடி ஊழியா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியா்கள், ஓட்டுநரையும் நடத்துநரையும் தாக்கியுள்ளனா்.
இதையடுத்து பேருந்து ஓட்டுநா் பேருந்தை சுங்கச்சாவடி குறுக்கே பக்கவாட்டில் நிறுத்தியதையடுத்து சுமாா் 5 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் நெரிசலில் காத்திருந்த பேருந்துக்களில் இருந்து இறங்கிய பயணிகள் சுங்கச்சாவடி சிடிடிவி கேமரா, ஊழியா்களின் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினா்.
தகவலறிந்த அங்கு விரைந்த செங்கல்பட்டு டிஎஸ்பி, சம்மந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர், சுங்கச்சாவடி ஊழியர்கள், பொதுமக்கள் சிலரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ரூ.18 லட்சம் கொள்ளை என பொய் புகார் கொடுத்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சுங்கச்சாவடி ஊழியர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. அவர்கள் இருவரும் தற்போது போலீஸில் சரணடைந்துள்ளனர்.