கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. மாநில மருத்துவக் கல்வி இயக்கக தோ்வுக் குழு மூலம் அங்கு மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டாலும், அதன் நிா்வாக நடவடிக்கை கள் அனைத்தும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வசமே இருந்து வந்தன. இந்த நிலையில், அதனை முழுவதுமாக அரசே ஏற்று, கடலூா் மாவட்ட மருத்துவக் கல்லூரியாக மாற்றப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடா்பாக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைத்து தகுதியான மருத்துவா்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி, ராமநாதபுரம், விருதுநகா், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் அக்கல்லூரிகளை அமைப்பதற்காக ரூ.1, 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக நடத்தும் என்று பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.