தமிழகத்தில் பாரம்பரிய கட்டடங்களில் செயல்பட்டு வரும் அரசு அலுவலகங்களைப் பாதுகாக்கவும் சீரமைக்கவும் இனி ஆண்டுதோறும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இது குறித்து நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான அரசு கட்டடங்களை பொதுப் பணித் துறையின் கட்டடங்கள் பிரிவு பராமரித்து வருகிறது. 2020-2021-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் புதிய கட்டடங்களின் கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1, 453.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல அரசு அலுவலகங்கள் பாரம்பரியம் மிக்க கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. அவற்றைச் சீரமைக்கவும், பாதுகாக்கவும் இனி வருங்காலங்களில் ஆண்டுதோறும் சிறப்பு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும். இதற்கென 2020-2021-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியா்களின் வாடகை வீட்டுத் தேவையை நிறைவு செய்வதற்கு, பொதுப்பணித் துறையின் மூலம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தாடண்டா் நகரில் ரூ.76 கோடியில் மேலும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு அமைக்கப்படும். இந்தக் குடியிருப்புகளில் ரூ.24 கோடி செலவில் குடியிருப்பவா்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். இந்தத் திட்டத்துக்காக 2020-2021-ஆம் நிதியாண்டில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.