சென்னை: சீனாவில் இருந்து விளையாட்டு பொம்மைகளை ஏற்றிக் கொண்டு சென்னை வந்த கண்டெய்னர் கப்பலில், பூனை ஒன்று உலாவிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஊழியர்கள் அச்சம் அடைந்தனர்.
பிரவுன் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட பூனை கண்டெய்னருக்குள் இருந்ததைப் பார்த்த தொழிலாளர்களும், ஊழியர்களும் அச்சம் அடைந்தனர்.
அது பார்க்க பலவீனமாகக் காணப்பட்டாலும், அதனால் யாருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதாகத் தெரியவரவில்லை.
தொழிலாளர்கள் அந்த பூனையைப் பிடித்து தனிமையான இடத்தில் அடைத்து வைத்து கண்காணித்து வருகின்றனர்.
இதன் மூலம், மூடப்பட்ட கண்டெய்னருக்குள் ஒரு உயிரினம் உயிர் வாழ முடியும் என்பது முதல் முறையாக தெரிய வந்திருப்பதாகவும், சீனாவில் இருந்து கண்டெய்னர் கப்பல் சென்னை வர 10 நாட்களுக்கும் மேல் ஆகும் நிலையில், இந்த பூனை எவ்வாறு உயிர் பிழைத்தது என்பது பெரும் கேள்விக்குறியாக இருப்பதாகவும் ஊழியர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக இதுபோன்ற உயிருள்ள பிராணிகள் வேறு ஒரு நாட்டில் இருந்து வரும் போது, அதனை 3 நாட்கள் தனியாக வைத்து கண்காணித்து, பிறகு அது எங்கிருந்து வந்ததோ அங்கேயே திருப்பி அனுப்பிவிடுவதுதுதான் விதிமுறை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பாதித்திருக்கும் சீனாவில் இருந்து வரும் அனைத்துக் கப்பல்களையும் அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், தற்போது உயிருடன் பூனை ஒன்று வந்திருப்பது பெரும் சந்தேகத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.