காருக்கு டீசல் தரப்படாததால் காரைக்காலில் இருந்து பேருந்தில் பயணித்த புதுச்சேரி அமைச்சர்
காரைக்கால் : அரசு நிறுவன டீசல் பங்க்கில் அமைச்சர் காருக்கு டீசல் தரப்படாததால் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் காரைக்காலில் இருந்து வெள்ளிக்கிழமை பேருந்தில் புதுச்சேரிக்கு பயணமானார்.
புதுச்சேரி அரசு நிறுவனமான கான்ஃபெட் மூலம் பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது. அரசு வாகனங்களுக்கு இந்நிறுவனம் எரிபொருள் வழங்குகிறது.
முதல்வர், அமைச்சர், வாரியத் தலைவர்கள், ஆட்சியர், காவல்துறையினரின் வாகனங்களுக்கு அரசு நிறுவன பங்க்கில் டீசல் நிரப்பிக்கொள்ளும்போது, அதற்கான நிலுவைத் தொகை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் புதுச்சேரியிலிருந்து வியாழக்கிழமை இரவு காரைக்கால் செல்வதற்காக டீசல் நிரப்ப ஓட்டுநர் அமைச்சர் காரை கொண்டு சென்றபோது, டீசல் பங்க்கில் டீசல் நிரப்ப மறுப்பு தெரிவிக்கப்பட்டதாம்.
இதனால் இருக்கும் எரிபொருளை பயன்படுத்தி காரைக்கால் வந்த அமைச்சர், அரசு நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்றுவிட்டு புதுச்சேரிக்கு அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுத்துக்கொண்டு புதுச்சேரிக்கு பயணமானார்.