ஒசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் ஹரியாணாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 20,000 லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக எல்லைப் பகுதியான ஒசூர் ஜூஜூவாடியில் எரிசாராயம் கடத்தப்படுவதாக ஒசூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் இன்று (சனிக்கிழமை) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்தின் பெயரில் வந்த லாரியை சோதனை செய்ததில் 550 கேன்களில் 20,000 லிட்டர் எரிசாராயம் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இவை ஹரியாணா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள சாலக்குடிக்கு கடத்தப்பட்டது என்பது தொடர் விசாரணையின் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து, கடத்தி வரப்பட்ட 20,000 லிட்டர் எரிசாராயத்தைப் பறிமுதல் செய்த போலீஸார் மோகன் (32) மற்றும் சிவய்யா (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.