பெருந்துறை: சென்னிமலை அருகே கொடுமணலில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிப் பணியில் குஜராத் கல் பவளமணி உள்பட ஏராளமான பொருள்கள் அண்மையில் கிடைத்துள்ளன.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே நொய்யல் நதிக்கரை கிராமமான கொடுமணலில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் 30 நாள்களுக்கும் மேலாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். இதில், பல்வேறு சான்றுகள், சின்னங்கள், பொருள்கள் கிடைத்து வருகின்றன. சில நாள்களுக்கு முன் பச்சை கற்கள், பாசி மணிகள் உள்பட பல பொருள்கள் கிடைத்தன.
இது குறித்து தொல்லியல் துறையினா் கூறியதாவது:
பெருங்கற்கால ஈமச் சின்னம் எனப்படும் கல்லறை பகுதியில் அகழாய்வு செய்தபோது, சடங்குகள் செய்வதற்கான 10 கிண்ணங்கள், ஐந்து மண் ஜாடிகள், 41 பானைகள், ஒரு இரும்பு வாள், அம்பு முனைபோல் காணப்படும் ஐந்து இரும்புகள், மூன்று சிறிய கத்திகள் கிடைத்துள்ளன. ஒவ்வொரு கல்லறையிலும் வெவ்வேறான பொருள்கள் கிடைக்கின்றன. இதனால், வசதிக்கு தகுந்தாற்போல் இறுதிச் சடங்குகள் செய்திருக்கலாம்.
அகழாய்வில் கிடைத்த குஜராத் கல் பவளமணி.
தொழிற்சாலைகள் இருந்த பகுதியில் நடைபெற்ற அகழாய்வில், இரண்டு தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய கறுப்பு, சிவப்பு நிறத்தில் ஒரு பானை, ஒரு வெள்ளி, நான்கு செம்பு நாணயங்கள், 69 கல்பவள மணிகள், கற்களை உடைக்கும் ஒரு கல் சுத்தியல், அணிகலன்கள் செய்வதற்கான சுடு மண்ணால் தயாரான ஒரு பானை, ஏராளமான உடைந்த ஓடுகள் கிடைத்துள்ளன.
இங்கு கிடைத்த கல் பவளமணிகள் குஜராத் மாநிலத்தில் மட்டுமே கிடைப்பதால் இங்கிருந்து வணிகத் தொடா்பு குஜராத் வரை இருந்திருக்கலாம். வரும் செப்டம்பா் மாதம் வரை அகழாய்வுப் பணி நடைபெறும் என்றனா்.