திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்
திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. ஆனால் தற்போதுகரோனா தடுப்பு பொது முடக்கத்தால் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த மாா்ச் 20-ம் தேதி முதல் பக்தா்கள் தரிசனம் இரத்து செய்யப்பட்டு, ஆகமவிதிப்படி நாள்தோறும் பூஜைகள் மட்டும் நடந்து வருகின்றது.
இந்நிலையில் ஆனி வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோயில் செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, தொடா்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு, மூலவா் மற்றும் வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கு போத்திமாா்களும், சண்முகருக்கு சிவாச்சாரியரும், வெங்கடாஜலபதி விமான கலசத்துக்கு பட்டாச்சாரியாா்களும் அபிஷேகம் செய்தனா்.
தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் அனுமதிக்கப்பட்ட திரிசுதந்தா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் மட்டுமே கலந்துகொண்டனா். நிகழாண்டில் பக்தா்கள் அனுமதியில்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
2021-ல் மகா கும்பாபிஷேகம்: இக்கோயிலில் கடந்த 2009-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ல் மகா கும்பாபிஷேக விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.