சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 5 காவலர்களில் 3 காவலர்கள் மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை- மகனுமான ஜெயராஜ் (58), பென்னிக்ஸ் (31) ஆகியோர் ஊரடங்கு காலத்தில், கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக திறந்து வைத்திருந்த குற்றச்சாட்டில், கடந்த மாதம் 19-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலர்களால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஜூன் 20 ஆம் தேதி அதிகாலை சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், 22-ஆம் தேதி பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் 23 -ஆம் தேதி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இது தொடர்பாக சிபிசிஐடி காவலர்கள் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஏற்கனவே விசாரணை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை மற்றும் சம்பவத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ், வெயிலுமுத்து ஆகியோரை மீண்டும் அழைத்து விசாரணை நடத்தினர்.
ஏற்கெனவே அவர்கள் 5 பேரையும் விசாரணை செய்து விட்டதாலும், சம்பவத்தின் போது பணியில் இருந்ததாலும் 5 பேரையும் சிபிசிஐடி காவலர்கள் புதன்கிழமை கைது செய்தனர். மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என சிபிசிஐடி காவலர்கள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட காவலர்கள் 5 பேரும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பேரூரணி சிறையில் அடைக்கப்பட்ட 5 காவலர்களில் சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து ஆகிய 3 காவலர்கள் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரும் பாதுகாப்பு கருதி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.