கிள்ளியூர் இ-சேவை மைய கணினி பழுது: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அவலகத்தில் கணினி பழுது காரணமாக கடந்த 2 மாதங்களாக மூடப்பட்ட அரசு இ.சேவை மையத்தை உடனே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுள்ளனர்.
கிள்ளியூர் உராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அரசு இ.சேவை மையம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் செயல்படவில்லை.
இந்நிலையில், கடந்த மே மாதம் ஒரு வாரம் திறக்கப்பட்ட நிலையில் பின்பு கணினி பழுது என கூறி கடந்த 2 மாதங்களாக இ.சேவை மையம் மூடப்பட்டுள்ளது.
இதனால், இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வருமானம், ஜாதி, இருப்பிட சான்று, பட்டா மாறுதல் மற்றும் குடும்ப அட்டையில் மாறுதல்கள் செய்வோர் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக, மேற்கூறிய தேவைகளுக்கு வருவோர் இ சேவை மையம் மூடப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த இ.சேவை மையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.