பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவுகள் வழங்குவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஆர்.சுதா தாக்கல் செய்த பொதுநலமனுவில், கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு வழங்கும் மதிய உணவு திட்டத்தால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நடுத்தர மற்றும் அடித்தட்டு குடும்பங்களில் உள்ள குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியுள்ள ஊட்டசத்து உணவுகளை வழங்க தமிழக அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் இலவசமாக முட்டை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என
கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில், பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் ஊட்டச்சத்தான உணவுகள் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக வரும் ஜூலை 27ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க தமிழக அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.