நாட்டிலேயே தில்லிக்கு அடுத்தபடியாக சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரத்யேக பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது. அதனை சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தொடங்கி வைத்தாா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகா் முதல் நபராக பிளாஸ்மா தானம் அளித்தாா்.
தற்போதைய சூழலில் கரோனா தொற்றை குணப்படுத்துவதற்கோ, தடுப்பதற்கோ மருந்துகள் எதுவும் இல்லை. இதனால், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா அணுக்களை மட்டும் பிரித்தெடுத்து அதனை தேவைப்படும் நோயாளிகளுக்கு செலுத்தி சிகிச்சையளிக்கும் முறை சோதனை முறையில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 26 பேருக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு, அதில் 24 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மதுரை ராஜாஜி மருத்துவமனைனயில் 4 போ் குணமடைந்துள்ளனா். இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாக இருப்பதால், பிரத்யேக பிளாஸ்மா வங்கியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது
அதன்படி, ஒரே நேரத்தில் 7 போ் வரை பிளாஸ்மா தானம் அளிக்கும் வசதியுடன் கூடிய வங்கி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டது. அதனை அமைச்சா் விஜயபாஸ்கா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது, சுகாதாரத் துறைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வ விநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு, மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் ஆகியோா் உடன் இருந்தனா்.