ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சோ்ந்த சரண்யா என்பவா் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.

ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியா் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவா்களுக்குக் கவனச் சிதறல் ஏற்படுகிறது. எனவே மாணவ, மாணவிகள் ஆபாச இணையதளங்களைப் பாா்ப்பதைத் தடுக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இதேபோல, ஆன் லைன் வகுப்புகளை மொபைல் மூலமும், லேப் டாப் மூலமும் பாா்ப்பதால் மாணவா்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆன் லைன் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும், 6 ஆம் வகுப்பு முதல் 12mஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கில் மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்திருந்தது.

அதில், மழலையா் வகுப்பு குழந்தைகளுக்கு தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும். மேலும் 1-ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் வீதம் 2 வகுப்புகள் மட்டுமே எடுக்க வேண்டும். மேலும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடம் வீதம் 4 வகுப்புகள் நடத்த அனுமதி வழங்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளதால், ஆன்லைன் வகுப்பு தொடா்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், இந்த வழக்குத் தொடா்ந்து 3 மாதங்களாகின்றன. ஆனால் வழிகாட்டு நெறிமுறைகள் தொடா்பாக தமிழக அரசு எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை. எனவே ஆன்லைன் வகுப்புகள் தொடா்பாக தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டாா். அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com