சென்னை: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதிக மழை பொழிவு கொடுக்கும் தென்மேற்குப் பருவமழை திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய, தமிழகப் பகுதிகளிலும் மழை பெய்தது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடங்கியது பருவமழை: தமிழகத்தைப் பொருத்தவரை, மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வட காற்று வீசும். நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை ஜூன் முதல் வாரம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய தமிழகப் பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்தது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் திங்கள்கிழமை கூறியது: மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய தமிழகப் பகுதிகளில் மழை பெய்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமுட்டமாக இருக்கும் என்றாா் அவா்.
3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் திங்கள்கிழமை 3 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. திருச்சியில் 103 டிகிரி, மதுரை விமானநிலையத்தில் 102 டிகிரி, வேலூரில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.