பிபிஇ கிட் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு ஜூன் மாத இறுதிக்குள் நீக்க வாய்ப்பு உள்ளதாக ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம்) ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
ஏஇபிசி, அமேசான் நிறுவனத்துடன் இணைந்து பிபிஇ கிட், முகக் கவசங்களை ஆன்லைனில் சந்தைப்படுத்துவது தொடர்பான இணையவழிக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்த ஏஇபிசி தலைவர் ஆ.சக்திவேல் கூறியதாவது:
பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடைகள் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கும் என்று இந்திய ஏற்றுமதியாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள் மருத்துவப் பயன்பாடுக்கு அல்லாத முகக் கவசங்களை நவீன முறையில் உற்பத்தி செய்து வருகின்றனர். மேலும், ஏற்றுமதிக்கான சர்வதேச சான்றிதழ்களைப் பெறும் முயற்சிகளிலும் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிபிஇ கிட் ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலனை செய்து வருகிறது. ஆகவே, வரும் ஜூன் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் ஏற்றுமதிக்கான தடை நீக்க வாய்ப்பு உள்ளது. இந்த தடை நீக்கமானது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்றார். இந்தக் கருத்தரங்கில் அமேசான் நிர்வாகி சமீத் ஸ்வாப்னில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.