தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜாவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தீநுண்மித் தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் அண்மை காலமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தேனி மாவட்ட ஆவின் தலைவரும், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ. ராஜாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ஓ. ராஜாவின் குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டத்தில், அவரது 62 வயது மனைவி மற்றும் உறவினர்கள் இருவருக்கு தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.