சேலம்: சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இ-பாஸ் இல்லாமல் செல்ல முயன்ற முன்னாள் எம்.பி. கே. அர்ஜூனன் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக் கிழமை இரவு, திமுக முன்னாள் எம்.பி.யும், தற்போது அதிமுகவில் இருந்து வருபவருமான கே. அர்ஜூனன், ஓமலூரில் இருந்து சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கருப்பூர் சோதனைச் சாவடியை அவரது வாகனம் கடக்க முயன்ற போது பணியில் இருந்த காவலர்கள், அவரது வாகனத்தை நிறுத்தி அடையாள அட்டையைக் கேட்டனர்.
அப்போது, காவல்துறைக்கும், அர்ஜூனனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அர்ஜூனன் காவலர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், காவல்துறை அதிகாரியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரியும், அர்ஜூனனை திருப்பித் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அர்ஜூனன் மீது சேலம் நகர காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.