காரைக்கால்: கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு காவிரி நீர் திங்கள்கிழமை வந்தது. இதனால் நிகழாண்டு சம்பா சாகுபடி பணிகளை குறித்த நேரத்தில் தொடங்க முடியும் எனவும், கூடுதல் நிலப்பரப்பில் சாகுபடி செய்யும் வாய்ப்பும் உள்ளதாக அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறினார்.
நிகழாண்டில் ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், ஜூன் 16}இல் கல்லணை வந்த நீர் கடைமடைப் பகுதிக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில், கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு காவிரி நீர் நூலாறு வழியாக திங்கள்கிழமை காலை வந்தது.
நல்லம்பல் அணை அருகே நூலாறு தடுப்பணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடும் நிகழ்ச்சியில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கலந்துகொண்டு காரைக்கால் வந்த காவிரி நீரை மலர் தூவி வரவேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது :
காரைக்கால் விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான தருணம். 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டு காரைக்காலுக்கு தண்ணீர் வந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் கடும் நிதி நெருக்கடியிலும் முதல்வர் நாராயணசாமி ரூ. 42 லட்சம் நிதி ஒதுக்கியதன்பேரில் காரைக்காலில் பொதுப்பணித்துறை மூலம் சுமார் 100 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு, அவை முடியும் தருவாயில் உள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் காரைக்காலில 350 கி.மீ. வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன.
குறுவை சாகுபடி முடியும் தருவாயில் உள்ளது. தற்போது வரும் தண்ணீர் மூலம் காரைக்காலில் 9,301 ஏக்கர் பாசன வசதி பெறும். சம்பா சாகுபடி பணிகளை குறித்த நேரத்தில் தொடங்க வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார் அமைச்சர்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர் (வருவாய்) எம். ஆதர்ஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் கே. ஜீவதாசன், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.