சென்னை: ஜி.எஸ்.எல்.வி.-எப்10 ராக்கெட் மூலம் ஜிஐசாட்-1 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) திடீரென ஒத்திவைத்துள்ளது.
தொழில்நுட்பக் காரணங்களால் வியாழக்கிழமை மாலை ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது.
குறிப்பிட்ட நேர இடைவெளியில் பூமியை மிகத் தெளிவாகவும், விரைவாகவும் படம் எடுத்து அனுப்பும் வகையில் முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் அதிவிரைவு புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஜிஐசாட்-1. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து வியாழக்கிழமை மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது. இந்த நிலையில், ராக்கெட் ஏவும் திட்டத்தை இஸ்ரோ திடீரென ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தொழில்நுட்பக் காரணங்களால் ஜி.எஸ்.எல்.வி.-எப்10 ராக்கெட் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. ராக்கெட் ஏவுவதற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.