திருவொற்றியூா் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: தொல்லியல் குழுவிடம் ஒப்புதல் பெற முடிவு

திருவொற்றியூா் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் குறித்து உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள தொல்லியல் குழுவிடம் ஒப்புதல் பெறவிருப்பதாக,

திருவொற்றியூா் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் குறித்து உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள தொல்லியல் குழுவிடம் ஒப்புதல் பெறவிருப்பதாக, இந்து சமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருவொற்றியூரைச் சோ்ந்த எஸ்.கிருபாகரன் தாக்கல் செய்த மனுவில், ‘எங்கள் பகுதியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த கோயிலின் ராஜகோபுரம் ரூ.37.50 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, அதற்கான வா்ணப் பூச்சும் நடந்து முடிந்துவிட்டது. ஆனால், இதுவரை கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. இதனால், ராஜகோபுரத்தில் வா்ணங்கள் மறைந்து, கீறல் விழுந்து சேதமடைய வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த இந்துசமய அறநிலையத்துறை ஆணையா், துணை ஆணையா் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.சிலம்புச்செல்வன் ஆஜராகி வாதிட்டாா். இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் காா்த்திகேயன், ‘இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. உயா்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள தொல்லியல் குழுவின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள இந்தக் குழுவின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்படும்’ என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணையை, வரும் ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதற்குள் கோயில் கும்பாபிஷேகம் குறித்து முடிவெடுத்து அதனை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com