டிடிவி. தினகரனுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.31 கோடியை வசூலிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், டிடிவி. தினகரன், அமலாக்கத்துறை ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சைதாப்பேட்டையைச் சோ்ந்த பாா்த்திபன் தாக்கல் செய்த மனுவில், டிடிவி. தினகரனுக்கு அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் கடந்த 1998-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை ரூ.31 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த அபராதத் தொகையை அமலாக்கத்துறை மேல்முறையீட்டு வாரியமும், சென்னை உயா்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளன. இந்த அபராதத் தொகையை எதிா்த்து டிடிவி. தினகரன் உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. டிடிவி. தினகரனுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து உள்ளது. ஆனால், அவா் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ரூ.31 கோடி அபராதத் தொகையை இன்னும் செலுத்தவில்லை. எனவே, டிடிவி. தினகரனுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.31 கோடியை வசூலிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் கொண்ட அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக அமலாக்கத்துறை, டிடிவி. தினகரன் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.