வீரபாண்டிய கட்டபொம்மன் என்றும், ஊமைத்துரை என்றும் திமுக - அதிமுக உறுப்பினா்கள் மாறிமாறிச் சொல்லிக் கொண்டதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
பேரவையில் செவ்வாய்க்கிழமை மீன்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, அரசுக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தாா்.
தென்மாவட்ட மக்களை நேரில் சந்தித்து அமைச்சா் ஒருமுறைகூட குறைகளைக் கேட்டறியவில்லை என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினாா். அப்போது, குறுக்கிட்ட மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா், வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி பேசிக் கொண்டே போகிறீா்கள். நான் சொல்வதையும் கேளுங்கள் என்று விளக்கம் தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து எழுந்த அனிதா ராதாகிருஷ்ணன், என்னைப் பாா்த்து வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி பேசுவதாக அமைச்சா் கூறுகிறாா். அவா் என்ன ஊமைத்துரையா? என்றாா்.
இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது.