கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: நாகையில் 3 மீனவ கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்

கரோனா வைரஸ் அச்சுற்றுதல் காரணமாக, நாகை வட்டத்துக்குட்பட்ட 3 கிராம மீனவர்கள் வியாழக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
நாகை  மீனவர்கள் வேலை நிறுத்தம்
நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்

நாகப்பட்டினம் : கரோனா வைரஸ் அச்சுற்றுதல் காரணமாக, நாகை வட்டத்துக்குட்பட்ட 3 கிராம மீனவர்கள் வியாழக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

மக்கள் அதிக இடங்களில் கூடுதவதைத் தவிர்த்தால், கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இயலும் என்ற சுகாதாரத் துறை வல்லுநர்கள் கருத்துப்படி, பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்து, கருத்தரங்கங்கள், மாநாடுகள் போன்றவை நடத்தவும் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், மீன்பிடித் துறைமுகங்கள், மீன் ஏலக் கூடங்கள் மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், நாகை வட்டத்துக்குட்பட்ட அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாறு ஆகிய 3 கிராம மீனவர்கள் வியாழக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், ஏற்கெனவே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை உடனடியாக கரை திரும்பவும் தொடர்புடைய மீனவப் பஞ்சாயத்துகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாகையில் தங்கியிருந்து மீன்பிடித் தொழில் ஈடுபடும் கேரள மீனவர்களை சொந்த ஊர்களுக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, அனைத்து கிராம மீனவர்களும் வேலை நிறுத்தம் மேற்கொள்ளவும், கடலுக்குச் சென்ற படகுகள் முழுமையாக கரை திரும்பி மீன் விற்பனையை நிறைவு செய்த பின்னர் மீன் விற்பனைக்குத் தடை விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மீனவப் பஞ்சாயத்தார் மோகன்தாஸ் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com