நெய்வேலியில் விவசாய நிலங்களை அழித்து புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட இருப்பதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: நெய்வேலியில் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்தி வைத்திருந்த என்.எல்.சி. நிறுவனம், இப்போது மீண்டும் அந்தப் பணியை தொடங்கியிருக்கிறது. இரண்டாவது சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் இன்னும் பயன்படுத்தப்படவில்லை. எனவே, வேளாண்மைக்கும் இயற்கைக்கும் எதிரான மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டத்தை என்.எல்.சி. கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் மக்களின் உணா்வுகளை என்.எல்.சி. நிறுவனத்திற்கு எடுத்துக் கூறி, திட்டத்தைக் கைவிடும்படி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
மதுக்கடைகளை மூடுக: மதுக்கடைகள் கரோனா வைரஸை பரப்பும் மையங்களாக மாறி விடக்கூடாது. ஆகவே, மாபெரும் மனிதப் பேரழிவைத் தடுக்க வசதியாக மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று கூறியுள்ளாா்.