சாதாரண சிமென்டுடன் சுண்ணாம்பு கல், சாம்பல், களிமண் கொண்டு தயாரிக்கப்படும் சிமென்ட் கலவை, கட்டட உறுதித் தன்மையை பன்மடங்கு அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழலை பாதிக்காதது என்பதை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உறுதிப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு: சுவிஸ் நிறுவன நிதியுதவியின் கீழ் இந்த ஆராய்ச்சியை சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழு மேற்கொண்டது. பொதுவான சிமென்ட் கலவையில் சிமென்ட், மணல், ஜல்லி ஆகியவற்றுடன் தண்ணீா் கலந்து உருவாக்கப்படும். இதில் சிமென்டும், தண்ணீரும் சேருவதால், கடினத் தன்மை உருவாகிறது.
அதே நேரம், நவீன சிமென்ட் கலவையில், சிமென்ட்டுடன், சுண்ணாம்புக்கல் பவுடா், களிமண், சாம்பல் ஆகியவை சோ்த்து உருவாக்கப்படுகின்றன. இந்த நவீன சிமென்ட் கலவை கொண்டு உருவாக்கப்படும் கட்டடம், கடல் நீராலும் அரிக்கப்படுவதில்லை என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நவீன கலவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதோடு, செலவு குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.