புதுக்கோட்டை: கரோனா குறித்து வாட்ஸப்பில் அவதூறு பரப்பியதாக புதுக்கோட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்ஆப்) கரோனா பரவல் குறித்து அவதூறு பரப்பியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை கூறியது
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் கரோனா வைரஸ் குறித்து தவறான, அவதூறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை கட்செவி அஞ்சலில் அவதூறு செய்தியைப் பரப்பிய புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (26), ராஜ்குமார் (21), அதேபோல அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (32) ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து சமூக ஊடகங்கள் கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையற்ற பீதியை ஏற்படுத்தும் வகையில் அவதூறான தகவல்களைப் பதிவிடுதல் மற்றும் பகிர்தலை தவிர்க்க வேண்டும்.
அரசு மேற்கொண்டு வரும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார் உமாமகேஸ்வரி.