வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் தனிமைப்பட்டு இல்லாமல் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"100 புதிய ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்படவுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள், வீட்டில் தனிமைப்பட்டு இருக்க வேண்டும் என்பது முதல்வரின் உத்தரவு. இது மிக மிக அவசியமாக தாமாக முன்வந்து செய்யக் கூடிய விஷயம். பிரதமர் மோடி மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கு முன்பாக தமிழக முதல்வர் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். யாருக்கும் எந்த பாதிப்பும் வரக் கூடாது, வைரஸ் பரவக் கூடாது என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வீட்டில் காவலர்கள் போடப்படும் வீட்டில் இருந்து வெளியே வருகிறார்கள். நமது நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். நீங்களே வைரஸைப் பரப்புபவர்களாக இருக்ககூடும். 2, 3 நாட்களுக்குப் பிறகே அறிகுறிகள் தெரிய வரும். கணவனிடம் இருந்து மனைவிக்கு பரவும் போன்ற பாதிப்புகளையும் பார்த்துள்ளோம். அனைத்து உதவியையும் செய்ய அரசு தயாராக இருப்பதால் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். இது அரசு உத்தரவு. இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டில் இருந்து வெளியே வரும் ஒருவரைப் பார்த்தால் கூட பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மேலும் அரசு வேடிக்கைப் பார்க்காது.
18 பேருக்கும் வெளிநாட்டுப் பயணத் தொடர்பு உள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட 17-வது நபருக்கு, அவரது மகனிடம் இருந்து பரவியிருக்கிறது. அவரது மகன் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர். இதேபோல் மதுரையில் பாதிக்கப்பட்டவருக்கு வெளிநாட்டுத் தொடர்பு இல்லாமல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அவருடைய வெளிநாட்டுத் தொடர்பையும் கண்டிபிடித்துள்ளோம். ஈரோட்டில் பாதிக்கப்பட்டவர்களுடன் இவருக்கு தொடர்பு இருந்திருக்கிறது" என்றார்.