தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் நிதியாக ரூ. 4000 கோடி ஒதுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
உலகமெங்கும் மிக வேகமாக பரவி வரும் கரொனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசும், மத்திய அரசும் 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் கரோனாவால் 23 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் ஒருவர் பலியானார்.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் நிதியாக ரூ. 4000 கோடி ஒதுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை மேலும் கூடுதலாக 2 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் சிறுகுறு நிறுவனங்களுக்கான வங்கி கடன் வட்டியை இரண்டு காலாண்டு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ரூ. 500 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் கரோனாவுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையும் பாராட்டியுள்ளார்.