தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மீது போலீஸார் லேசான தடியடி செய்தனர்.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவையொட்டி தஞ்சாவூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயிலடி, காந்திஜி சாலை, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
அத்தியாவசிய பொருட்களான மருந்து, காய்கறி, மளிகை கடைகள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளன. இக்கடைகளிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால் பெரும்பாலான அத்தியாவசிய கடைகளில் வெயில் காரணமாக மக்கள் இடைவெளி விட்டு நிற்க இயலவில்லை.
ஊரடங்கு உத்தரவையொட்டி மாநகரில் 99 சதவீத மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். என்றாலும் கிட்டத்தட்ட ஒரு சதவீத மக்கள் சாலைகளில் நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் சுற்றித் திரிகின்றனர்.
இது தொடர்பாக புகார்கள் எழுந்தன. எனவே, பழைய பேருந்து நிலையம், காந்திஜி சாலை உள்ளிட்ட இடங்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.
மேலும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை போலீஸார் நிறுத்தி விசாரித்தனர். அத்தியாவசிய காரணங்களுடன் சென்றவர்களை அனுப்பி வைத்தனர்.
காரணமின்றி சுற்றியவர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பினர். சிலரது வாகனங்களைப் பறிமுதல் செய்து, கரோனா பாதிப்பு குறித்து விளக்கி எச்சரிக்கை செய்தனர்.