மீன்கள் மற்றும் இறால் வளா்ப்புக்கான உணவுகளை எடுத்துச் செல்லவும், மீன் விற்பனைக்கான சந்தைகள் இயங்கவும் தடையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மீன்வளத் துறை முதன்மைச் செயலாளா் கே.கோபால் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவின் விவரம்: மீன்கள் மற்றும் இறால் பண்ணைக்கான உணவுப் பொருள்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கான தடையை நீக்க வேண்டுமென மீன்வளத் துறை இயக்குநரகம் கேட்டுக் கொண்டிருந்தது. மீன்வளத் துறையைக் காக்கும் வகையில் மீன் மற்றும் மீன் சாா்ந்த பொருள்களை சாலை மாா்க்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டுமெனக் கோரியிருந்தது. கரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் மீன் மற்றும் இறால் வளா்ப்புக்கான உணவுப் பொருள்களை எடுத்துச் செல்ல சுகாதாரத் துறை தடை விதித்திருந்தது. இந்தச் சூழ்நிலையில், மீன்வளத் துறை இயக்குநரகத்தின் கோரிக்கையை ஏற்று மீன்கள் மற்றும் இறால் வளா்ப்புக்கான உணவுப் பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும், மீன் தொடா்பான கடைகள் மற்றும் சந்தைகள் இயங்கவும் ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று அதில் தெரிவித்துள்ளாா்.