சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் தடுப்புக்கட்டைகள் அகற்றப்பட்டதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி,3வது வார்டு பகுதியில் ஏப்ரல் முதல் வாரத்தில் மூன்று பேர், கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, கடந்த 15 நாட்களுக்கு முன்னர் குணமடைந்துவீடு திரும்பிவிட்டனர்.அதனையடுத்து,கடந்த வாரம், சென்னையிலிருந்து தம்மம்பட்டி வந்த கூலித்தொழிலாளர்களால் இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.
இந்நிலையில் அவர்களது மருத்துவ அறிக்கைகளில், அவர்கள் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது தெரியவந்தது. அதனையடுத்து,வியாழக்கிழமை அதிகாலை, வருவாய்த்துறையினர், காவல்துறையினர் இணைந்து, தம்மம்பட்டி கடைவீதி, உடையார்பாளையம், முஸ்லீம்தெரு ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்ட அனைத்து தடுப்புக்கட்டைகளும், தம்மம்பட்டியைச் சுற்றி ஐந்து கி.மீ.தூரத்தில் சாலையில் வைக்கப்பட்ட தடுப்புக்கட்டைகளும் அகற்றப்பட்டன.
இதனால் நிம்மதி அடைந்த பொதுமக்கள்,தங்களது இருசக்கரவாகனங்களில் தம்மம்பட்டியைச்சுற்றி ஊர்களுக்கு செல்லத்துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், தம்மம்பட்டியில் பாதிக்கப்பட்ட மூவரும் குணமாகிவிட்டனர். அதனையடுத்து அவர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்துதலும் நிறைவடைந்துவிட்டது. மேலும் இப்பகுதியில் புதியதாக கரோனா தொற்று ஏதும் இல்லை.
அதனால், தம்மம்பட்டியை தனிமைப்படுத்தும் நாட்கள் நிறைவடைந்துவிட்டன. அதனைத்தொடர்ந்து, தம்மம்பட்டியைச்சுற்றி போடப்பட்ட அனைத்து தடுப்புக்கட்டைகளும் அகற்றப்பட்டுவிட்டன என்றனர்.