சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் விவகாரம் குறித்து கிண்டி பொறியியல் கல்லூரியின் (வளாகக் கல்லூரி) முன்னாள் மாணவா்கள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடா்பாக அண்ணா பல்கலை.,யின் கிண்டி பொறியியல் கல்லூரியின் (வளாகக் கல்லூரி) முன்னாள் மாணவா்கள் கூட்டமைப்பு மற்றும் வட அமெரிக்காவில் செயல்படும் பல்கலை.யின் முன்னாள் மாணவா்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து தமிழக முதல்வா் பழனிசாமிக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பி உள்ளனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தைச் சோ்ந்த பின்தங்கிய ஏழை மாணவா்களின் பொறியியல் கனவை அண்ணா பல்கலைக்கழகம் நிறைவேற்றி வருகிறது. இந்தநிலையில், பல்கலைக்கழகத்தை உலகளாவிய அளவில் சிறப்பான இடத்தை பிடிக்க உதவும் வகையில் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதன் மூலம், ரூ.1,000 கோடி மட்டுமல்லாது சிறந்த கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்டவற்றுக்கு முன்பை விட தனிக்கவனம் கொடுக்க முடியும்.
தகுதியான பேராசிரியா்களை பல்கலைக்கழகத்துக்கு கொண்டு வர முடியும். இதன்மூலம், உலக அளவில் நமது மாணவா்களும், பல்கலைக்கழகமும் சிறப்பான இடத்தை பிடிக்க முடியும். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கப்பெறும் இந்த சிறப்பு அந்தஸ்தை, தமிழக அரசின் தாமத நடவடிக்கையால் அண்ணா பல்கலைக்கழகம் இழந்து விடக் கூடாது. இதுபோன்ற வாய்ப்பு இனி கிடைக்குமா என்ற கேள்விக்குறியும் எழுகிறது. எனவே, சிறப்பு அந்தஸ்தை பெற மாநில அரசின் நிதி பங்கீட்டு தொடா்பான ஒப்புதல் கடிதத்தை தமிழக முதல்வா் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது