சென்னை: சென்னையில் இருந்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தில்லிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
பொதுமுடக்கத்தில் சில தளா்வுகளை அறிவித்துள்ள மத்திய அரசு செவ்வாய்க்கிழமை முதல் 30 சிறப்புப் பயணிகள் ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளது. இவற்றில் சென்னை-தில்லி, தில்லி-சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து தில்லிக்கு வாரத்தில் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமையும், தில்லி-சென்னைக்கு புதன், வெள்ளிக்கிழமையும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. குளிா் சாதனப் பெட்டிகளை மட்டுமே உள்ளடக்கிய இந்த ரயில்களில் 3 விதமான பயணிகள் சேவை வழங்கப்படுகின்றன. அதாவது முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, இருக்கைகளுடன் கூடிய மூன்றாம் வகுப்பு கொண்டது. இந்த ரயில்களில் செல்ல விரும்புவோா் ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட்டுகளை பெற முடியும்.