மகாராஷ்டிரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பிய வங்கி ஊழியரின் கர்ப்பிணி மனைவிக்கு கரோனா
திருவில்லிபுத்தூர்: மகாராஷ்டிரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு திரும்பி வங்கியில் பணிபுரியும் அலுவலரின் 9 மாத கர்ப்பிணி மனைவிக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது செவ்வாய்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் வசிப்பவர்கள் அந்தந்த மாநில அரசின் முறையான அனுமதி பெற்று தங்கள் சொந்த மாநிலம் மற்றும் சொந்த ஊருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் வசிப்பவர்கள் அரசு அனுமதி பெற்று வருபவர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அழகாபுரி சோதனைச் சாவடியில் அதிகாரிகள் விசாரணை செய்து அவர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பல்கலைக்கழகங்களில் தனிமைபடுத்தி வருகின்றனர்.
அவ்வாறு தனிமைப்படுத்தி உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்து அதன் முடிவுகளை வைத்து அவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் வருவாய்த்துறை காவல்துறை நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் வங்கி ஒன்றில் பணிபுரியும் அலுவலர் ஒருவரின் குடும்பம் உரிய அனுமதி பெற்று வாகனம் ஒன்றின் மூலம் கடந்த 16ஆம் தேதி வங்கி அலுவலர், அவரது மனைவி , மனைவியின் தாயார் , வங்கி அலுவலரின் 4 வயது குழந்தை ஆகிய நால்வரும் அழகாபுரி சோதனைச் சாவடிக்கு வந்தனர்.
பின்னர் அந்த 4 பேருக்கும் அதிகாரிகள் குழுவினர் தனியார் பல்கலைகழகத்தில் அவர்களை தனிமைப்படுத்தி ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர்.
அவ்வாறு அனுப்பியதில் வங்கி அலுவலர் மனைவிக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்கிழமை உறுதியானது தெரியவந்தது. மேலும் வங்கி அதிகாரியின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவரையும் கர்ப்பிணியின் தாயாரையும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் நோய்த்தொற்று உறுதியானதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வருவாய்த்துறை மற்றும் காவல்துறை நகராட்சி ஊழியர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் அவர்கள் வீட்டுக்குச் சென்று கர்ப்பிணி மனைவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுப்பி வைத்துள்ளனர் நிறைமாத கர்ப்பிணி என்பதால் அவரது தாயாரும் உடன் சென்றுள்ளார்.
மேலும் அவர்கள் குடியிருந்த பகுதியில் கிருமி நாசினி மருந்துகளை சுகாதாரத்துறையினர் தெளித்து வருகின்றனர்.
வங்கி ஊழியர் மற்றும் அவரது குழந்தைக்கு பாதிப்பு இல்லாததால் ராஜபாளையம் அடுத்து சோளசேரியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.