சேலத்தில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களின் கும்பாபிஷேக பணி குறித்து இந்து அறநிலைய கூடுதல் ஆணையாளர் உள்பட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
சேலம் மாவட்டம் பேளூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயம், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்தி, ஆத்தூர் ஸ்ரீ காயநிர்மலேஸ்வரர், ஆறகளூர் காமநாதேஸ்வரர், கூகையூர் சிவாலயம் எனப் பஞ்சபூத ஸ்தலங்கள் வசிஷ்ட மாமுனிவரால் வசிஷ்ட நதிக்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதில் கூகையூர் ஆலயம் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் ஆறகளூர் காமநாதேஸ்வரர் ஆலயம் கடந்த பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகையால் மீதமுள்ள மூன்று ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல வருடங்கள் ஆகிறது.
இது குறித்து பேளூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தைக் குறித்து தினமணியில் மூன்று மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக இந்து அறநிலைய கூடுதல் ஆணையாளர் எஸ்.வெற்றிவேல் உதவி ஆணையாளர் உமாதேவி ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அ.மோகன் நேரில் பார்வையிட்டனர். மூன்று ஆலயங்களுக்கும் தலா ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுப் பணி நடைபெற உள்ளதாகத் தெரிவித்தனர்.