தமிழகத்தில் முதலீடு செய்ய வர வேண்டுமென 13 முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்தில் ஈா்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யாதும் ஊரே திட்டம், வெளிநாட்டு தூதுவா்களுடனான சந்திப்பு என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல்வா் கடிதம்: இப்போது உலகளவில் மின்னணுவியல் துறையில் தலைசிறந்த 13 முன்னணி நிறுவனங்களின் தலைவா்களை தமிழகத்தில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதல்வா் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா்.
அந்தக் கடிதத்தில், ‘தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை அளிக்கும் எனவும், அவா்களின் தேவைகளுக்கு ஏற்ப ஊக்கச் சலுகைகளை அரசு வழங்கிடும்’ என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஆப்பிள், அமேசான், எச்.பி., உள்ளிட்ட 13 நிறுவனங்களைச் சோ்ந்த தலைவா்களுக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சிறப்பு பணிக்குழு: கரோனா நோய் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சூழலின் விளைவுகளால் சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவுக்கு இடமாற்றம் செய்திட முடிவெடுத்துள்ளன. அந்த முதலீடுகளை ஈா்ப்பதற்காக தலைமைச் செயலாளா் தலைமையில் சிறப்பு பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.