சென்னை: சென்னை புளியந்தோப்புப் பகுதியில் 1,400 படுக்கைகளுடன் தயாரான கரோனா வார்டை தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை புளியந்தோப்பில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை, கரோனா நோயாளிகளுக்கான வார்டாக மாற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை கரோனா வார்டாக மாற்றும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், அதனை தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் கரோனா கட்டுப்பாட்டு திட்ட சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அறிகுறி இல்லாமல், கரோனா தொற்று பாதிப்பு அதிகம் இல்லாத நோயாளிகள் மட்டும் இங்கு தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் கரோனா நோயாளிகளுக்கும் வீட்டிலேயே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் தனித்தனி அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கருவிகளை பராமரிக்கத் தனி அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கரோனா நோயாளிகளிடம் யாரும் வேறுபாடு காட்ட வேண்டாம். ராயபுரம் பகுதியில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகம் இருப்பது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. தமிழகத்தில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.