எரசக்கநாயக்கனூர் மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தினர் போராட்டம்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரம்பரிய மலை மாடுகளை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
ஆனால் சமீபகாலமாக மலைப்பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வனத்துறையினர் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலமாக மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தினர் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மலைப்பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் மாவட்ட வனத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் புதன்கிழமை எரசக்கநாயக்கனூரிலிருந்து மாடுகளுடன் ஊர்வலமாகச் சென்று தேனி மாவட்ட ஆட்சியரை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். தகவலறிந்த சின்னமனூர் காவல்துறையினர் எரசக்க நாயக்கனூரில் வைத்து ஊர்வலமாகச் செல்ல முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து ஆய்வாளர் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவித்த தகவலின் பேரில், முக்கிய சங்க உறுப்பினர்களும் மூலம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாவட்ட ஆட்சியர் கூறியதை அடுத்து முற்றுகை போராட்டத்தை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தினர் கைவிட்டனர். இதனை அடுத்து முக்கிய நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பேச்சுவார்த்தைக்குச் சென்றனர்.