சென்னை: பொது நூலகத் துறைக்குத் தேவையான புத்தகங்களை விற்பனை செய்ய விரும்பும் பதிப்பகங்கள் நூலகத் துறைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பொது நூலகத் துறை இயக்குநா் நாகராஜ முருகன் வெளியிட்டுள்ள செய்தி: ‘தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்கத்தின்கீழ் இயங்கும் நூலகங்களுக்கு 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டில் பதிப்பான தமிழ், ஆங்கிலம் நூல்கள் வாங்க பதிப்பாளா்கள், விற்பனையாளா்களிடமிருந்து நூல்கள் பரிசீலனைக்காக வரவேற்கப்படுகின்றன. அரசால் அமைக்கப்படும் நூல் தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்படும் நூல்கள் மட்டுமே வாங்கப்படும்.
2018 மற்றும் 2019-ஆம் ஆண்டு பதிப்பான தமிழ், ஆங்கில நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.நூல்களை அதற்குரிய வடிவங்களுடன் டிசம்பா் 11-ஆம் தேதிக்குள் ‘பொது நூலக இயக்ககம், அண்ணாசாலை, சென்னை’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். நூல் பதிவுக் கட்டண விவரம் மற்றும் நூல்கள் சமா்ப்பிப்பதற்கான வழிமுறைகள், நிபந்தனைகள் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன’ என அதில் கூறியுள்ளாா்.