ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முதியவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் நேரில் விசாரணை நடத்தினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது குன்னூர் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரன்(68). இவர் தனது வீட்டருகே உள்ள தோட்டத்தில் உள்ள மாடுகளை பராமரித்து விட்டு இரவு அங்கேயே தங்குவது வழக்கம்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் தோட்டத்தில் தங்கி இருந்த ராஜேந்திரன், வெள்ளிக்கிழமை காலை தலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கிருஷ்ணன்கோவில் காவலர்கள் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள், கொலை செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா, என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார், யார் கொலை செய்தார்கள் என்பது குறித்து கிருஷ்ணன்கோவில் காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
தோட்டத்தில் உள்ள வீட்டில் முதியவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.