ஈரோடு: ஈரோடு மாநகர் பகுதியில் பெய்த திடீர் சாரல் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அவதி அடைந்தனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
ஆனால், அதே நேரத்தில் புறநகர் பகுதிகளான சத்தியமங்கலம் அந்தியூர் கோபி பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் மழை பெய்யாமல் போக்கு காட்டி வந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் 11 மணி அளவில் திடீரென வானம் கரு மேகத்துடன் காணப்பட்டது.
அதைத்தொடர்ந்து 11.30 மணி அளவில் லேசான தூறல் மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
இந்த திடீர் சாரல் மழையால் கடை வீதிகளில் பொருள்கள் வாங்க வந்த மக்கள் நனைந்தபடியே சென்றனர். பத்து நிமிடம் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. அதன்பிறகு வானம் கரு மேகத்துடன் காணப்பட்டது.