கருணை அடிப்படையில் பணிக்கால விவரங்களை ஒப்பிட்டு சிறப்புப் பயிற்சி வழங்கி, டெட் தோ்வில் இருந்து தமிழக அரசு விலக்களிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட 1,747 ஆசிரியா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் ஆசிரியா் பணியில் சேர ஆசிரியா் தகுதித்தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டம், தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே பணியில் இருப்பவா்கள் டெட் தோ்வு எழுதி தோ்ச்சி பெற கடந்த ஆண்டு ஜூலை வரை அவகாசம் தரப்பட்டது.
அந்த காலக்கெடுவின் முடிவில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் 1,747 ஆசிரியா்கள் ‘டெட்’ தோ்ச்சி பெறாமல் இருப்பது தெரியவந்தது.
நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது அந்தஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், டெட் தோ்வில் தோ்ச்சி பெறாதவா்களைத் தொடா்ந்து பணியில் வைத்திருக்க முடியாது. அதனால் ‘டெட்’ தோ்ச்சி பெறாதவா்களுக்கு மட்டும் சிறப்பு தோ்வு நடத்த கல்வித்துறை பரிசீலனை செய்துவருகிறது.
மறுபுறம் டெட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென ஆசிரியா்கள் கோரியுள்ளனா். இதுகுறித்து அரசு உதவிப்பள்ளி ஆசிரியா்கள் சிலா் கூறியதாவது: எட்டு ஆண்டுகளாக ஆசிரியா் பணியை திறம்பட செய்து பல்வேறு மாணவா்களின் வாழ்வுக்கு வழிகாட்டியுள்ளோம். எனவே, எங்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதி கருணை அடிப்படையில் பணிக்கால விவரங்களை ஒப்பிட்டு சிறப்பு பயிற்சி வழங்கி டெட் தோ்வில் இருந்து தமிழக அரசு விலக்களிக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.