சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வாய்க்காலில் மூழ்கி இரு சிறுமிகள் வெள்ளிக்கிழமை பலியாகினர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி மணிக்கொல்லை ஊராட்சி உள்ள பால்வாதூன்னான் காலனியைச் சேர்ந்த சக்திவேல் மகள் மகாலட்சுமி (வயது.9), இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ராயர் மகள் அனு என்கிற தார் நிஷா (வயது.11), இவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி அளவில் மகாலட்சுமியும், தார் நிஷா மற்றும் சக நண்பர்களோடு அதே பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலான, கழுதை வெட்டி வாய்க்கால் பகுதிக்குச் சென்றனர்.
மகாலட்சுமி, தார் நிஷா மற்றும் 2 மாணவிகளோடு நான்கு பேரும் வடிகால் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மகாலட்சுமியும், தார் நிஷாவும் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர். இதைப் பார்த்த சக சிறுமிகள் அழுது கொண்டு ஊர் மக்களிடம் கூறியுள்ளனர், அதைத்தொடர்ந்து ஊர்மக்கள் ஒன்று திரண்டு கழுதை வெட்டி வாய்க்காலில் அடித்துச் சென்ற இரண்டு மாணவிகளின் உடலை தேடி வந்தனர், தொடர்ந்து ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு இரு மாணவிகளையும், சடலமாக மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவம் நடந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . 2 மாணவிகள் வாய்க்காலில் மூழ்கி இறந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.