காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோயில் சன்னிதி தெருவில் உள்ள சுரகேசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இம்மாதம் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில் சன்னிதி தெருவில் சுரகேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா கும்பாபிஷேகம் அனுக்கை விக்னேசுவர பூஜையுடன் திங்கள்கிழமை தொடங்கின. இதனைத் தொடர்ந்து கோ.பூஜை, மகாலெட்சுமி பூஜையும் மாலையில் வாஸ்து பூஜையும் நடந்தன. டிச.1ஆம் தேதி இன்று மாலையில் யாகசாலை பூஜைகள் பட்டா.இ.கணேச குருக்கள் தலைமையில் தொடங்குகிறது.
வரும் டிசம்பர் 4 ஆம் தேதி காலையில் 6 மணி முதல் 7.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் மத்திய தொல்லியல்துறை பராமரிப்பின் கீழ் பெரியகாஞ்சிபுரம் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பூவேந்தன் மற்றும் விழாக்குழு நிர்வாகி நடராஜன் ஆகியோர் தலைமையில் நடந்து வருகின்றன.
இக்கோயில் சிறப்புகள் குறித்து பட்டா.இ.கணேச குருக்கள் கூறியது,
தேவலோகத்தில் மன்மத சம்ஹாரத்தின் போது அனைத்து தேவர்களுக்கும் ஏற்பட்ட சுரம்(வெப்புநோய்)தணிய வேண்டி பூலோகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள சுரகேசுவரரை வழிபட்டு ஆரோக்கியம் அடைந்த திருக்கோயிலாகும். குபேரன் வழிபட்ட கோயில். தமிழகத்திலேயே நீள்வட்ட வடிவத்தில் கோயிலின் கருவறை இரு கோயில்களில் மட்டுமே உள்ளது. அதில் ஒன்று வைணவக்கோயிலான ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் கருவறை.
மற்றொன்று காஞ்சிபுரத்தில் உள்ள இத்திருக்கோயிலாகும். கோயில்களின் கருவறையில் ஜன்னல்கள் இருக்காது. இத்திருக்கோயிலில் மட்டும் கோயில் கருவறையில் ஜன்னல்கள் அமைந்திருப்பது மற்றும் ஒரு சிறப்பு. ஆரோக்கியமும், செல்வமும் பெற வழிபட வேண்டிய கோயிலாகும் எனவும் அவர் தெரிவித்தார்.