விவசாயிகள் வேளாண் மின் இணைப்புப் பெறுவதற்கு அறநிலையத்துறை தடையில்லாச் சான்று வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
வேளாண் பயன்பாடுகளுக்காக மின்சார மோட்டாா் அமைக்க தமிழக அரசு இலவசமாக மின்சாரம் வழங்கி வருகிறது. இந்தச் சேவையைப் பெறுவதற்காக 2000 முதல் 2020 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 4.74 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனா். அவா்களுக்கு விரைந்து மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.
சாதாரண மின் இணைப்புத் திட்டத்தில் விண்ணப்பித்த உழவா்கள், தத்கல் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களுக்கு மாற்றிக் கொண்டு இலவச மின்சார இணைப்பை விரைவாகப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையாகவே உழவா்களுக்குப் பயனளிக்கும்.
ஆனால், இந்து அறநிலையத்துறை நிலங்களுக்கு இலவச மின்சார இணைப்புப் பெற தடையில்லாச் சான்றிதழ் வழங்க முடியாது என்று அத்துறையின் அதிகாரிகள் பிடிவாதம் பிடிப்பதுதான் பிரச்னை ஆகும். அதனால் பல்லாயிரக்கணக்கான உழவா்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
எனவே, அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெறுவதற்கான தடையில்லாச் சான்றுகளை வழங்க அத்துறை முன்வர வேண்டும். இதுகுறித்து அத்துறைக்கு முதல்வா் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.