உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பிடிஆர் கால்வாயில் பாசனப் பகுதிகளுக்கு புதன்கிழமை (அக். 7) முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் தண்ணீரை திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சில தினங்களுக்கு முன் பிடிஆர் கால்வாயில் பாசன நீர் திறக்க உத்தரவிட்டார். அதன்படி உத்தமபாளையம் அருகே வாய்க்கால் பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்து தண்ணீரை திறந்து வைத்தார்.
இதன் மூலம் ,உத்தமபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட சின்னமனூர், வேப்பம்பட்டி ஆகிய கிராமங்களில் 830 ஏக்கர் நிலமும் ,தேனி வட்டத்திற்கு உட்பட்ட சீலையம்பட்டி, சீப்பாலக்கோட்டை, பூமலைகுண்டு, தர்மாபுரி தாடிச்சேரி, வெங்கடாசலபுரம், கொடுவிலார்பட்டி ,ஜங் கால் பட்டி, கோவிந்த நகரம், பாலகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள 4316 ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பயன்பெறும் வகையில் பிடிஆர் கால்வாயில் 100 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.